Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சிறுகதை: சுயரூபம்
Nov 08 2022 கலை இலக்கியம்

சிறுகதை: சுயரூபம்

சிறுகதை

சுயரூபம்

மணியின் பிணத்தைச் சுற்றி சலசலப்பு ஒப்பாரியுமாய் கூட்டம் கூடி இருந்தது. வீட்டு வாசலில். சட்டென வந்துநின்ற இரண்டு கார்கள் மீது அவர்கள் பார்வைப்பட்டது.

முதலில் வந்த காரிலிருந்து மூன்று நபர்கள் பயில்வான் ரேஞ்சுக்கு, அருகில் வந்து நின்றனர். 'யார் இவர்கள்' என்று மணியின் மூத்த மகன், அவர்கள் அருகில் செல்ல, காரில் வந்தவர் "வணக்கம், என் பேரு சுபாஷ்! நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வரேன், நானும் உங்க தகப்பனாரும் ஒண்ணா வெளிநாட்டில் வேலை செஞ்சவங்க கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேலே. அந்த பழக்கத்துல அவர் எங்கிட்ட சில வருஷத்துக்கு முன்னால ஒரு பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்தாரு அதைப்பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே"..

"என்னது கடனா? யாரு எங்கப்பாவா... என்ன சொல்றீங்க....அவர் அப்படி எல்லாம் கடன் வாங்குற ஆள் இல்லையே... நீங்க ஏதோ அட்ரஸ் மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். "

"தம்பி! இருங்க.. பொறுமையா இருங்க. அவசரப்படாதீஙக.. மணிதானே இறந்தது. அவரோட மூத்த பையன் நீங்க வாசு, நீங்க மற்ற ரெண்டு பேர் மகேஷ், ராஜேஷ். சரிதானே?" மற்ற சகோதரர்களைப் பார்த்து சுட்டி காட்டினார். "இங்கே பாருப்பா நான் யாருங்கறது உங்களுக்கு தெரியாது ஆனா நீங்க யார்,யார் என்ன பண்றீங்க எப்பேர்பட்டவங்க என்ன படிச்சு இருக்கீங்க அத்தனை விவரமும், மணி என்கிட்ட சொல்லி இருக்கிறார்".             

உங்க அம்மா இறந்தப்போ வெளிநாட்டில் அவசரமா புறப்பட்டு போகணும்னு சொன்னப்போ எல்லா ஏற்பாடு, செலவு பண்ணி உங்க அப்பாவை வழி அனுப்பி வச்சது நான்தான். அந்த நன்றி கடனுக்காக எனக்கு ஒரு உதவி செஞ்சார் உங்க அப்பா. இதுக்கு கை மாறாதான் அவருக்கு பிரச்சனைன்னு சொன்னப்போ கொஞ்சம் கூட யோசிக்காம நான் 10 லட்சம் அவருக்கு கொடுத்தேன்..."        

ஊர்ப் பெரியவர் ஒருவர், " ஏம்பா... நடு வீட்ல பிணத்தை வச்சுட்டு இப்படி பண்ணலாமா? உங்க கடன் பிரச்சனை எதுவா இருந்தாலும் நீங்க எடப்பட்ட நாள்ல வந்து பேசி சரி பண்ணலாமே... இப்படி எழவு வீட்டுல வந்தா பிரச்சனை செய்யணும்."

"இங்க பாருங்க! நான் இங்கே சண்டை போடவோ..பணம் உடனே வேணும்னு சொல்லவோ வரல. இப்படி சமாச்சாரம் இருக்கு அதற்குரிய ஆதாரம் என்கிட்ட இருக்கு. நீங்க பசங்க எல்லாம் ஒத்துப் போய் இந்த பணத்துக்கு பொறுப்பு எடுத்துக்கிறேன்னு சொல்லி கையெழுத்து போட்டு கொடுத்தா போதும் நான் போய்டுறேன்."

இரண்டாவது மகன் மகேஷ், "அதெல்லாம் ஒன்னும் போட முடியாது. அப்படி ஏதாவது இருந்தா எங்க கிட்ட சொல்லாம இருப்பாரா..இது ஏதோ ஏமாற்று வேலையா இருக்கு."

"தம்பி!வார்த்தையை அளந்து பேசுங்க..இது உங்க அப்பாவோட கையெழுத்து தானே..!"

"கையெழுத்து அவரோடதா இருந்தாலும் கடனெல்லாம் ஏத்துக்க முடியாதுய்யா.. அவர் எப்போ, யாருக்காக வாங்கினார் எதுக்கு செலவு பண்ணினார்னு எந்தக் கருமாந்திரமும் தெரியாம எப்படி ஏத்துக்கிறது?"

ஊர்ப் பெரியவர், "ஏம்பா..! கையெழுத்து உங்க அப்பாவோடதானேனு தெரிஞ்சா கடன் திருப்பிக் கொடுப்பதுதானே நியாயம்.."

"இங்க பாருங்க நாங்க இப்ப இருக்கிற நெலமையில யாருக்கும் எதுவும் பண்ற மாதிரி இல்ல. நாமலே..வீட்டு மேல இருக்கிற கடன் அண்ணன் பொண்ணு கல்யாணம்,தேர்தலில் போட்ட காசுனு ஏகத்துக்கும் நஷ்டத்துல கடன்பட்டு கிடக்கிறோம் இதுல இது வேற சுமந்துட்டு திரிய முடியுமா..? " மூன்றாவது மகன் ராஜேஷின் உளறல் இது.

"அப்போ இதுதான் உங்க முடிவு இல்லையா...?"

"ஆமா.."

"வண்டி பூரா ஆளுங்களை கூப்பிட்டு வந்து இருக்கேன். இங்கிருந்து பிணத்தை தூக்க விட மாட்டேன். கையெழுத்து போட்டா மட்டும்தான் நான் இங்கிருந்து நகர்வேன்."

"அதுவும் பார்த்துவிடலாம் அந்த கம்ப, உருட்டு கட்டையை.. தூக்குடா!". ஒரே சலசலப்பு கூச்சலுக்கு இடையே, "நிறுத்துங்க! " என அலறலும், கண்ணீருமாய் ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.

சுபாஷின் அருகில் வந்தவள், "இங்க பாருங்க உங்க பணத்துக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். எங்கே கையெழுத்துப் போடணும் சொல்லுங்க.. நான் போடுறேன்.. அப்பாவுக்காக இது கூட செய்யலன்னா அவர் எங்களுக்காக பாலைவன சூட்டுல போய் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி கல்யாணம் பண்ணி கொடுத்ததில் ஒரு அர்த்தமும் இல்ல. எனக்காக, எங்க அப்பா ஒரு வீடு வாங்கி தந்து இருக்கிறார். அதுலதான் நான் குடியிருக்கிறேன். அந்த வீட்டை எங்க அப்பாவுக்காக நான் உங்களுக்கு கொடுத்துடறேன். எங்க அப்பாவோட ஆத்மா சாந்தியடையும்னு உங்க கடனுக்கு நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். பத்திரத்தை கொடுங்க நான் கையெழுத்து போடுறேன்.." மணியின் மகளை நெகிழ்வுடன் ஏறெடுத்து பார்த்த சுபாஷ்,  

"உங்க அப்பா எல்லாம் சரியாத்தாமா சொல்லி இருக்கிறார். நாளைக்கு நான் செத்துப் பிணமா கிடந்தாலும் மூணுல ஒண்ணும் உதவாது. பொண்ணுதான் எனக்காக வந்து நிப்பான்னு சரியாதான் சொல்லிருக்காரு.." என்றபடி, கையில் இருந்த முத்திரைத்தாளைக் கிழித்து எறிந்தார். எல்லோரும் அதிர்ச்சியால் விழி பிதுங்கி நின்றனர்.

"இங்கே பாரும்மா.. இவ்வளவு நேரம் நடந்தது எதுவும் உண்மையில்ல. இப்போ நான் சொல்லப் போற விஷயம்தான் உண்மை. அதாவது உங்க அண்ணனுங்க எப்பேர்பட்டவங்கன்னு உங்க அப்பா புரிஞ்சனாலதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வாங்குன ஒரு நிலத்தை என் பொறுப்புல அப்படியே வைக்கச் சொன்னாரு. இன்னைக்கு நிலவரத்துக்கு அதோட மதிப்பு 20 லட்சம். அப்பவே அவர் உன் பேர்லதான் எழுதணும்னு திட்டம் போட்டார்.

நான்தான், 'உன் காலத்துக்கு அப்புறம் அந்த வேலை செய்யலாம். யாருக்கும் தெரியாம அப்படியே இருக்கட்டும்'னு சொல்லி இருந்தேன். அதை ஏத்துக்கிட்டாரு. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் தான் இவங்க சுயரூபம் தெரிய வரும்னு இப்படி ஒரு பரிட்சை வைக்கச் சொன்னாரு. நான் நினைச்சேன். அது இப்ப சரியா தெரிஞ்சிருச்சு.. பதினாராம் நாள் காரியம் முடிஞ்சு, என் வீட்டுக்கு நீ வாம்மா. இதுதான் விலாசம், நீ வந்து என்னைப் பார். சட்டப்படி என்ன செய்யணுமோ அத செஞ்சி, அப்படியே உன் பேருக்கு மாத்தித் தரேன்". 

நன்றிப் பெருக்கோடு கண்ணீர் சிந்தினாள் தந்தையை எண்ணி மகள். மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

thajudeenjl@gmail.com