என்று சரியாகும் இந்த நிலைமைகள்
10-11-2023 வெள்ளிக்கிழமையன்று திடீர் பயணம் சென்னை முதல் திருநெல்வேலி வரை.
ஏசி இல்லாமல் படுக்கை வசதி கொண்ட பேருந்து. டிக்கெட் விலை ரொம்ப அதிகம் இல்லை,கம்மிதான் 2000 ரூபாய்.வண்டி கிளம்ப ஆரம்பிக்கும் முன்பே ஒரு ஏழு எட்டு கேமராக்களோடு குபுகுபுவன ஒரு அமைச்சர் போலீஸ்காரர்களோடு உள்ளே நுழைந்தார். எனக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத் தலைவர் இடத்தில் டிக்கெட்டுடைய விலை என்னவென்று கேட்டார்,எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்தார் அவர் 1500 ரூபாய் என்று சொன்னார். இதெல்லாம் கேமராவில் பதிவானதாக தெரியவில்லை. உள்ளே வரை சென்று இன்னும் சிலரிடம் கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அமைச்சர் சென்றவுடன் அந்த குடும்பத் தலைவரிடம் கேட்டேன், டிக்கட் உண்மையில் 1500ரூபாயா ? இல்லை 2000 என்றார். அப்ப ஏன் கம்மியா சொன்னீங்க அப்படி சொல்ல சொன்னாங்களா?என்று கேட்டேன்.
இவ்வளவு கேமரா இருக்கு, பத்திரிக்கையில் வந்தாலும் வரும்,என்னுடன் என் சின்ன பசங்கல்லாம் இருக்காங்க, எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாது இல்ல..அதான் அப்படி சொன்னேன் என்றார்.
இப்படி எல்லாம் பயப்பட வேண்டியுள்ளதே என்று நினைத்துக் கொண்டேன்.
எல்லாமே ஒரு கண் துடைப்பு தான். ரெட்பஸ் போன்ற தளங்களில் தீபாவளி போன்ற சீசனுடைய காலங்களில் டிக்கெட் உடைய விலை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று போய் பார்த்துக் கொள்ள முடியும் .ஆனாலும் கண் துடைப்பிற்காக இதுபோன்று அமைச்சர் கேட்டு விட்டு போகிறார். என்று மாறும் இந்த நிலை.தெரியவில்லை.
சரி 2000 ரூபாய் கொடுத்து பஸ்ஸில் செல்கிறோம், சுய தேவைகளுக்காக நல்ல இடத்தில் நிறுத்துவார்கள் என்று நினைத்தால், அவர்கள் நிறுத்திய எந்த இடத்திலும் கழிவறை நன்றாக இல்லை,சுத்தமாக இல்லை. கழிவறை இருந்தால் உள்ளே கதவில்லை,கதவிருந்தால் உள்ளே ஜக்கு பக்கெட் இல்லை,அதுவும் இருந்தால் பைப்பே இல்லை,பைப் இருந்தாலும் தண்ணீர் வருவதில்லை.