Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சிறந்த ஆசிரியர்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Sep 26 2024 ஆன்மீகம்

சிறந்த ஆசிரியர்


கல்வியறிவற்ற பாமர மக்களை நல்வழி நோக்கி அழைக்கவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். இறைவனிடமிருந்து கற்ற ஞானங்களை மக்களுக்குப் போதித்து அவர்களை நேரிய பாதை நோக்கி அழைத்தார்கள். ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகளும் அன்பான அணுகுமுறையும் கனிவான பேச்சும் அவர்களிடம் நிறைவாக இருந்தன.  வன்னெஞ்சம் கொண்டோரையும் தம் அன்பான சொற்களால் ஈர்க்கும் நற்பண்புகளைக்கொண்ட நல்லாசிரியராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். 


அல்லாஹ் கூறுகின்றான்: கல்வியறிவில்லாத மக்களிடம் அவர்களுள் ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (62: 2) 


அல்லாஹ் அருளிய அறவுரைகளை அறியா மக்களுக்குப் போதிப்பதற்காகவும் ஞானங்களைக் கற்பிக்கவும் நல்லொழுக்கங்களை எடுத்துக்கூறி அவற்றைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவுமே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவையும் வாழ்வியல் ஒழுக்கத்தையும் செவ்வனே கற்பித்துக்கொண்டே இருந்தார்கள். அவற்றை அவர்கள்தம் தோழர்கள் அப்படியே பின்பற்றி ஒழுகினார்கள்.  


அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடைய (மனைவியர் ஒருவரின்) ஓர் அறையிலிருந்து வெளியே புறப்பட்டு மஸ்ஜிதுக்குள் நுழைந்தார்கள். அங்கே வட்டமாக அமர்ந்திருந்த இரண்டு வகைக் குழுவினரைக் கண்டார்கள். ஒரு குழுவினர், குர்ஆனை ஓதிக்கொண்டும் அல்லாஹ்விடம் (துஆ) பிரார்த்தனை செய்துகொண்டும் இருந்தார்கள். மற்றொரு குழுவினர், கல்வியைக் கற்றுக்கொள்கின்றார்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அனைவரும் நன்மையில் உள்ளார்கள். இவர்களோ குர்ஆனை ஓதுகிறார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அவன் நாடினால் அவர்களுக்குக் கொடுப்பான்; அவன் நாடினால் அவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொள்வான். (ஆனால்) இவர்களோ கற்றுக்கொள்கின்றார்கள்; கற்றுக்கொடுக்கின்றார்கள். நான் அனுப்பப்பட்டதே ஆசிரியராகத்தான் என்று கூறிவிட்டு, அவர்களோடு அமர்ந்துகொண்டார்கள். (இப்னுமாஜா: 229)   


“நான் ஆசிரியராகத்தான் அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் வாக்கியம் நன்கு கவனிக்கத்தக்கது. ஓர் ஆசிரியர் தம் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே விரும்புவார். அத்தகைய விருப்பத்தைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இறைநம்பிக்கைகொண்டு  சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்தார்கள். இறைநம்பிக்கை கொள்ளாதோர் குறித்துக் கவலைப் பட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால், அவர்களின் போக்கிற்காக நீங்கள் கடும் துக்கப்பட்டு உம்மை நீரே மாய்த்துக்கொள்வீர் போலும்?”  (18: 6) அந்த அளவிற்குத் தம் சமுதாய மக்கள்மீது கவலைகொண்டிருந்தார்கள்.


சிறுவர்களுக்குக் கற்பித்தல்: சிறுபிராயத்தில் எவற்றையெல்லாம் கற்பிக்கின்றோமோ அவை அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துபோய்விடுகின்றன. அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவையே அவர்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கும். எனவே நல்ல நல்ல கருத்துகளையும் நல்லொழுக்கங்களையும் சிறுபிராயத்திலேயே அவர்களின் மனத்தில் விதைத்துவிட வேண்டும். அதுதான் பெற்றோரும் ஆசிரியரும் செய்ய வேண்டிய பெரும் கடமையாகும். அந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுவர்களுக்கு இஸ்லாமியக் கொள்கையையும் நல்லொழுக்கங்களையும் போதித்துள்ளார்கள்.

 

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், “சிறுவனே! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு! அவன் உன்னைப் பேணிக்காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளைப் பேணி நடந்துகொள்! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.


அறிந்துகொள்! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது (அவ்வாறே,) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது. (விதி எழுதிய) பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, (விதி எழுதப் பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன” என்று கூறினார்கள். (திர்மிதீ: 2440)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்பு மகனாகிய உமர் பின் அபீஸலமா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. (புகாரீ: 5376)


இவ்வாறு ஒருவருக்கு இறைநம்பிக்கையைக் கற்பித்தார்கள்; மற்றொருவருக்கு உண்ணும் ஒழுக்கத்தைக் கற்பித்தார்கள்; வேறொருவருக்குக் குடும்பத்தில் மனைவியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கற்பித்தார்கள். மற்றொருவருக்கு ஆன்மிகத்தில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று கற்பித்தார்கள். இன்னொருவருக்கு வியாபாரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் கற்பித்தார்கள். ஆக ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் கல்வியைப் போதித்துக்கொண்டே இருந்தார்கள். 


தொண்டு செய்யக் கற்பித்தல்: வெறுமனே ஆன்மிகத்தை மட்டும் அண்ணல் நபியவர்கள் போதிக்கவில்லை. மாறாக ஆன்மிகத்தோடு சமுதாயத் தொண்டுகளை மேற்கொள்ளவும் கற்பித்தார்கள்; சுற்றுச்சூழலைக் காக்கும் விதத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்பித்தார்கள். அந்த வகையில் அபூபர்ஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்ற ஒரு செய்தி கூர்ந்து கவனிக்கத்தக்கது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “நான் பயன்பெறும் வகையிலான ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டேன். அப்போது அவர்கள், “முஸ்லிம்களின் பாதையிலிருந்து அவர்களுக்குத் தொல்லை தருபவற்றை அகற்று” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 2618) 


அங்கு முஸ்லிம்கள் மட்டுமே அதிகமாக இருந்ததால், ‘முஸ்லிம்கள்’ என்று கூறியுள்ளார்கள். பொதுவாக மக்களுக்குத் தொல்லை தருபவற்றைச் சாலையிலிருந்து அகற்றுவது எவ்வளவு பெரிய சமுதாயத் தொண்டு என்பதை மற்றொரு நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. “நான் சொர்க்கத்தில் உலாவுகின்ற ஒரு மனிதரைக் கண்டேன். அவர் (சொர்க்கத்தில் நுழையக் காரணமென்னவென்றால்) சாலை நடுவே மக்களுக்குத்  தொல்லை விளைவித்துக்கொண்டிருந்த மரத்தை வெட்டி (அகற்றி)னார்” (முஸ்லிம்: 1914) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

    

மக்கள் நடமாடும் பாதையில் அவர்களுக்குத் தொல்லை தருகிற விதத்தில் முளைத்திருக்கின்ற மரத்தையோ பிறவற்றையோ அகற்றுவது ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்லக் காரணமாகிறது என்றால் அது எவ்வளவு பெரிய சமுதாயத்  தொண்டு என்பதை உணர்ந்துகொள்ளலாம். ஆக இவ்வாறு மக்களுக்குப் பயன்படுகிற எதைச் செய்தாலும் அவருக்கு அது நன்மையாக அமையும் என்பதைக் கற்பித்துச் சென்றுள்ளார்கள். 


சில நேரங்களில் நபியவர்கள் தம் தோழர்களைப் பார்த்து, நான் உங்களுக்குக் கற்றுத் தரட்டுமா? நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டு, தம் தோழர்களுக்குக் கற்பித்தார்கள். சிலவேளைகளில், ‘நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்களா’ என்று கேட்டு, கற்பித்துள்ளார்கள். வேறு சில நேரங்களில், நபித்தோழர்களே முன்வந்து தமக்குத் தேவையானதைக் கற்றுத்தருமாறு கேட்டு, கற்றுக்கொண்டுள்ளார்கள். பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என் அனைவருக்கும் கற்பித்தார்கள். 


வார்த்தைகளை மாற்றக்கூடாது: ஆசிரியரான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்பித்ததை நாம் அப்படியே  பயன்படுத்த வேண்டுமே தவிர, ஒரு வார்த்தையைக் கூட மாற்றக்கூடாது. நபியவர்கள் கற்றுத்தந்த  வார்த்தைகளில் கூடுதல், குறைவு செய்வதோ நம் விருப்பத்திற்கேற்ப வார்த்தைகளையோ வாக்கியங்களையோ சேர்த்துக்கொள்வதோ கூடாது. அதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.


தம்மிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: “நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்துகொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு ‘அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக,  வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக, ரஃக்பதன் வரஹ்பதன் இலைக, லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக, ஆமன்த்து பி கிதாபிகல்லதீ அன்ஸல்த்த வ நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த’ (இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்துவிட்டேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் ‘நபி’யை நான் நம்பினேன்’) என்று பிரார்த்தனை செய்துகொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுவாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!”


இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். ‘நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்’ என்ற இடத்தை அடைந்ததும் (‘உன் நபியை’ என்பதற்குப் பதிலாக) ‘உன் ரசூலை’ என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்” என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள். (புகாரீ: 247)


ஆக ஆசிரியராக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எல்லோருக்கும் செவ்வனே கற்பித்தார்கள்; அன்போடும் பண்போடும் போதித்தார்கள். அல்லாஹ்வின்  தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்தவற்றைக் கூடுதல் குறைவின்றி நம்மால் இயன்ற அளவிற்குப் பின்பற்றுவதே நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். எனவே அவர்களின் போதனைகளை நாம் அனைவரும் பின்பற்றி, அதன்படி வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெறும் நல்வாய்ப்பை நல்லோன் அல்லாஹ் நமக்கு நல்குவானாக.

=====

Related News