Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

வெற்றியின் ரகசியம்! இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அற்புதமான அதிகாலை நேரம்.
Oct 23 2022 ஆன்மீகம்

வெற்றியின் ரகசியம்! இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அற்புதமான அதிகாலை நேரம்.

 

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அற்புதமான அதிகாலை நேரம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையா? என்று கேட்டால் எத்தனை பேர் ஆம்! என்று பதில் கூறுவீர்கள்? ஏனென்றால் காலமெல்லாம், தாமதித்து தூங்குவதும், தாமதித்து எழுவதும் இன்று சாதாரண வாழ்க்கை முறையாகிவிட்டது.

இறைவனை துதிப்பதற்கு, நேரமோ, காலமோ இல்லை. எந்த நேரத்தில்,  எப்போது வேண்டுமானாலும் துதிக்கலாம். ஆனால் சில குறிப்பிட்ட நேரங்கள் இறைவழிபாட்டிற்கென, சிறப்பு வாய்ந்ததாக நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரவின் கடைசி கால் பகுதி நேரம், இந்து மதத்தில் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது சுமாராக, அதிகாலை 3:30 மணியிலிருந்து சூரிய உதயம் வரை இருக்கும்.

இஸ்லாத்தில் இரவின் மூன்றில் கடைசி பகுதி தஹஜ்ஜத் நேரம் என்று சிறப்புக்குரியது. பஜ்ர் நேரம், வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை. இந்த நேரத்தின் சிறப்புகளை குர்ஆனின் பல வசனங்கள், மற்றும் ஹதீஸ்கள் (நபி வழி) வலியுறுத்துகின்றன. இறைத்தூதர் முகம்மது நபி அவர்களுக்கு தஹஜ்ஜத் தொழுகை கடமை ஆக்கப்பட்டிருந்தது.

இறைவனுக்கு மிக விருப்பமான தொழுகை இறைத்தூதர் தாவூது (கிறித்தவத்தில் டேவிட்-David) அவர்களின் தொழுகையாகும் என்று ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள், இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள்.

 

இறை வழிப்பாட்டிற்கு உகந்த நேரம்.

இந்த நேரத்தில் எழுந்து, இறைவனை ஜெபிப்பது, தியானம் செய்வது, இறை வேதத்தை ஓதுவது, கல்வி கற்பது, போன்றவை சிறந்த பலன்களை தருவதோடு ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இக்காலத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள், வழிபாடுகள் முழு பலனை அளிக்க வல்லது. இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகின்றன.

மனதின் பிரச்சினைகளை அகற்றவும், இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம்.

சுருக்கமாக சொல்லப்போனால், இந்த நேரம், உங்களை நீங்களே விரும்பும் வகையில் உருவாக்கிக் கொள்ளும் நேரம். நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த, நினைத்த காரியங்களை நிறைவேற்ற, இந்த நேரத்தை பயன்படுத்தலாம். இந்த நேரத்தில் எழுந்து, குளித்து, இறைவழிபாட்டை செய்து, நமது வேலையை செய்யத் தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றி தான்.

 

அதிகாலை நேரத்தில் நம் உடலில் நிகழுவது என்ன?

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது, அதிகாலையில் விழிப்பதாகும். அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும்.

இந்த கால நேரத்தில் எழுந்து செயல்படும்போது, மனநிலையானது ஒரு நிலை படுகிறது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகிறது. இந்த கால நேரத்தில், ஒரு குறிப்பிட்ட தன்மையில் நம் உடல் இருப்பதை மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. அந்த நேரத்தில் மெலடோனின் (Melatonin) சுரபி அதிக அளவில் சுரக்கிறது. நவீன மருத்துவத்தில் இந்த சுரப்பி மனநிலையை நிலைப்படுத்தும் தன்மை கொண்டது என்று அறிந்துள்ளனர். இது நம்முடைய உடலில் உருவாக கூடிய புற்று நோயின் அணுக்களை கொல்லக்கூடிய தன்மை கொண்டது.

நம்மை நாமே நிதானமான நிலையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் வைத்திருப்பது இந்த நேரத்தில் இயல்பாகவே நடக்கிறது.

இந்த நேரத்தில், மனித எண்ண அலைகளின் தாக்கங்கள் குறைந்திருக்கும். எனவே, இந்த நேரத்தில் எதிர்மறையான சக்தி அதிர்வுகள் நெகட்டிவ் வைப்ரேஷன் (Negative Vibration) இருக்காது.

 

அதிகாலை எழுவதன் பலன்கள்.

அதிகாலையில் வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு அதிகமாக நிறைந்திருக்கும். காலையில் சூரியன் உதயமாகும் போது, சூரியக்கதிரிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை இது உறிஞ்சிக்கொண்டு, பூமிக்கும் பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. ஆகவே இந்த ஓசோன் நிறைந்திருக்கும் நேரத்தில் நாம் எழுந்து, சுத்தமான காற்றை சுவாசித்தோமே ஆனால், உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும்.

அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால் சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். வைகறைப்பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒலிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. சூரிய கதிர்களால் வைட்டமின் டி நேரடியாக கிடைக்கும். இவை நம் உடலில் படும்போது, நரம்புகளுக்கு புதுத்தன்மை அளிக்கின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையும் பெறுகின்றன. சூரிய ஒளி கதிர்கள், மூளையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல் மீது படும் படியும், கண்களுக்கு நீல நிற வானத்தின் ஒளிக்கதிர்கள் தெரியும் படியுமான நடை பயிற்சி செய்யும் போது தான் பீனியல் சுரப்பி இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பி சூரிய ஒளி பரவத்தொடங்கியதும் அதனுடைய செயற்பாட்டை குறைத்துக் கொண்டே போகும். காலை 6 மணிக்கு பிறகு மெலடோனின் திரவம் சுரப்பது நின்று விடுகிறது. அதனால் தான் சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக எழும்ப வேண்டும் என்கின்றனர்.

 

உலகை வெற்றி கொள்ளலாம்.

தினம் தினம் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கின்றோமோ, அதில் நாம் மாபெரும் வெற்றி அடைய முடியும். இன்றைக்கு வாழ்க்கையில் சாதித்தவர்களின் பெரும்பான்மையினர் அதிகாலையில் எழுந்தவர்கள் தான். ஒரு மனிதன், 40 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு செயலை செய்தால், அது வழக்கமாக மாறிவிடும், என்கின்றனர் அறிவியலாளர்கள்.

எனவே இரவு சீக்கிரமாகவே தூங்கினீர்களானால் அதிகாலையில் எழுந்திருப்பது சுலபமாக இருக்கும். ஒரு நாளின் ஆரம்பம் சரியாக இருந்தால், முடிவும் சரியாக இருக்கும். உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இந்த இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன. அதிகாலை நேரத்திலே கண் விழிக்கின்றன. நாமும் இந்த  இயற்கையோடும், பிரபஞ்சத்தோடும் இணைந்து வாழ்ந்தால் பல விஷயங்கள் நமக்கு வசப்படும்.

உங்களை வெற்றி கொண்டால், உலகையே வெற்றி கொள்ளலாம்!

நன்றி!

குடந்தை சா. முகம்மது ஷாஹித்

Related News