சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.
14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கிபி 632இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.
இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பருனி (973 - 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் ருக்சனா கான் கூறும்போது, “சாரதா பீடம் கோயில் அன்றைய நாகரிகத்தின் அடையாளம். இந்த கோயிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்தை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உள்ளூர் நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை. எனினும் உள்ளூர் முஸ்லிம்கள் சாரதா பீடத்தை பாதுகாத்து வருகின்றனர்.