இவர் பெயர் அப்துர் ரஹ்மான். கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் நாகர்கோவிலை அடுத்த கோட்டாரில் வசித்து வருகிறார். துபாயில் சுமார் 12 வருடங்களாக பணிபுரிந்து தற்போது தன்னுடைய ஊரில் Henrywood எனும் நிறுவனத்தின் காலணி வியாபாரம் செய்து வருகிறார். YMJ அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். சிறுவயதில் இருந்தே சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இரத்த தானம், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரத்திற்கான உணவு பொருட்கள், மருத்துவ உதவி, கல்வி செலவு வாரத்தில் 4 நாட்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். கொரோனா காலத்தில் தொடங்கி இன்று வரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் எல்லா மருத்துவர்களுக்கும் பரிச்சயமான இவர் அங்குள்ள தலைமை மருத்துவரின் அனுமதியுடன் ஒரு தொண்டனாகவே தன்னுடைய சமூக சேவைகளை செய்து வருகிறார். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மரணித்த சுமார் 125 மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார். இங்கு சிகிச்சை பெறும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வருகிறார். புத்தன்துறையில் தக்கலை மற்றும் ஆசாரிபள்ளம் ஊர்களின் சார்பாக 2 குருதிக்கொடை முகாம்களை நடத்தியுள்ளார். இச்செயலை பாராட்டி அவசர குருதிக்கொடை சேவைக்கான விருதை குமரி மாவட்ட முன்னாள் கலெக்டர் வழங்கியுள்ளார். கூடுவாஞ்சேரியில் உள்ள அன்புடையோன் ஆதரவில்லத்தில் உள்ள முதியோர்களை இவரின் அமைப்பின் மூலம் பராமரித்து வருகிறார். மேலும் திருச்சியில் உள்ள 'Darussalam Dawah Centre என்னும் மையத்தில் இஸ்லாத்தை ஏற்று அதனை பற்றிப் படிக்க விரும்புபவர்களின் உணவு மற்றும் அனைத்து செலவுகளையும் இவரே ஏற்றுத் தொண்டாற்றி வருகிறார். சாதி மதம் பாராமல் ஆதரவின்றி மரணிப்பவர்களின் உடல்களைக் காவல்துறை உதவியுடன் அடக்கம் செய்துவருகிறார். இரவு பகல் பாராமல் யார் எந்த நேரம் அழைத்தாலும் அவர்களுக்காகத் தன் உதவிக் கரங்களை நீட்டுபவர்.