Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நமக்கும் தெரியாமல் நமது மொபைல் போன் மூலம் நாம்  கண்காணிக்கப்படுகின்றோமா?
M Hussain Ghani Sep 26 2024 தொழில்நுட்பம்

நமக்கும் தெரியாமல் நமது மொபைல் போன் மூலம் நாம் கண்காணிக்கப்படுகின்றோமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன்கள் நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. குறுகிய நேரத்திற்கு கூட நாம் அவற்றை பிரிந்து வாழ்வது மிக கடினமாக மாறிவிட்டது.

 

ஆனால், நாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்கள் நமது தனிப்பட்ட தகவல்களை சேமிக்கின்றன, பகிர்கின்றன, சில சமயம் நமக்கும் தெரியாமல் நம்மிடமிருந்து களவாடி கொடுக்கின்றன, நமக்குத் தெரியாமலேயே நம்மை கண்காணிக்கின்றன. இந்த கண்காணிப்பு மற்றும் களவாடல் பல்வேறு வழிகளில் நடக்கிறது, பல கட்டமைப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக நமது அனுமதியோடு நமக்குத் தெரியாமல் நடக்கின்றன. தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான அனுமதியை மொபைலுக்கான செயலிகளை நிறுவும் போது மறைமுகமாகக் நம்மிடம் கேட்கும் அனுமதியின் மூலம் அது செயல்படுகின்றது.

 

மொபைல் செயலிகள் மற்றும் அனுமதிகள் (Mobile Apps & Permissions)

 

நாம் மொபைலில் பதிவிறக்கம் செய்யும் பல செயலிகளுக்கு (Apps) நமது தரவுகளை அணுகுவதற்கான அனுமதிகளை கேட்கும் நிகழ்வு நடைபெறும்.

 

அது குறித்த தகவல்களைப் பார்ப்போம்:

 

கேமரா அனுமதி:  

சில செயலிகள் நமது கேமராவை செயல்படுத்த, புகைப்படம் எடுக்க காணொளி பதிவுகளை அணுக மற்றும் பதிவு செய்ய அனுமதி கேட்கும் நாமும் அந்த நிபந்தனைகளை படித்துப் பாரக்காமல் ஓகே கொடுத்து விடுவோம். பிறகு என்ன? நமக்குத் தெரியாமல் நமது கேமராவை அந்த செயலி செயல்படுத்தி தனக்கு கட்டளை பிறபித்த உரிமையாளருக்கு நமக்குத் தெரியாமலேயே நமது செயல்பாடுகளை அனுப்பிக் கொண்டே இருக்கும்.

 

இடம் (Location) துல்லியமாக கண்டறிதல்: பல செயலிகள், குறிப்பாக சமூக ஊடக செயலிகள் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவை, நமது இயல்பு அல்லது வாழ்விடங்களை கண்காணிக்கின்றன. இதற்கு மொபைலில் GPS அலகு பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் நீங்கள் எங்கு சென்றீர்கள், எந்தக் கடையில் பரோட்ட சாப்பிடுகிறீர்கள், எந்தக் கடையில் டீ  சாப்பிடுகிறீர்கள், நீங்கள் செல்லும் மருத்துவமனை, நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் போன்றவைகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். உங்களைப் பற்றிய தகவல்கள் தேவைப்படுபவர்களுக்கு துட்டுவாங்கிக் கொண்டு போட்டுக் கொடுத்துவிடும்.

 

 தொலைபேசித்தொடர்புகள், செய்திப் பகிர்வுகள் மல்டி-மீடியா கண்காணிப்பு (Multimedia Surveillance)களைப் பற்றி :

 

சில செயலிகள், குறிப்பாக சமூக வலைத்தள பயன்பாடுகள், நமது தொடர்புகளையும், உரையாடல்களையும் உன்னிப்பாக கவனிக்கின்றன. நமது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது “எனது கார் பழையதாகி விட்டது, விற்கலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிப் பாருங்கள். அடுத்து நீங்கள் உங்கள் முகநூல் பக்கம் சென்று பாருங்கள், used car sales விளம்பரமாகப் பார்க்கலாம். காருக்கு அல்லது பைக்கிற்கு காப்பீடு முடிந்து விட்டது புதுப்பிக்க வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருங்கள் அது சம்பந்தமான விளம்பரங்கள் குருந்தகவல்கள் சில நேரங்களில் போன் கால்கள் கூட வரலாம். வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும் துல்லியமான விளம்பரங்களை (Targeted Advertising) காட்டுவதற்காக நம்முடைய செயல்பாடுகளை (Browsing data, search history) நமக்குத் தெரியாமலேயே நம்மை உன்னிப்பாக கண்காணிக்கின்றன.

 

நமது மைபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யும் செயலிகளின் நிபந்தனைகளை படித்துப் பார்க்காமல் அனுமதிப்பதன் விளைவுகள் தான் நமக்குத் தெரியாமல் நம்மை கண்காணிக்க நமது அனுமதியோடு விட்டுவிடுகின்றோம்.

 

சாதன-நிலை துல்லிய கண்காணிப்பு (Device-Level Tracking):

IMEI மற்றும் MAC முகவரிகள்: ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதன் அடையாளமாகக் கருதப்படும் IMEI எண், மற்றும் நெறியியல் (network) அடையாளமாகப் பயன்படும் MAC முகவரிகள் உள்ளது. இந்த அடையாளங்கள் மூலமாக, நமது சாதனம் எப்போது, எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிய முடியும். இந்தத் தொழில்நுட்பம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மற்றும் கண்காணிக்க காவல்துறைக்கு பெரிதும் பயன்படுன்கின்றன.

 

கூகுள், ஆப்பிள் சேவைகள் (Google, Apple Services): கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது தகவல்களை திரட்டும் முக்கிய அமைப்புகள் ஆகும். நாம் இப்போன்களின் பிரபலமான சேவைகளை பயன்படுத்தும் போது, சர்வரிலிருந்து எங்கே நம்முடைய சாதனம் உள்ளது, எவ்வளவு நேரம் நாம் பயன்படுத்துகிறோம், என்ன தகவல்கள் நமது மொபைலில் சேமிக்கப்படுகிறது போன்ற தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன.

 

நிறுவனங்களின் தகவல் சேகரிப்பு (Data Collection by Companies):

அன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இன் இயங்கு தளங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் போன்று பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், பயனர்களின் தகவல்களை சேகரித்து அதை அவர்களது விளம்பர முதலாளிகளிடம் விற்பனை செய்கின்றன.

 

மேலும் நம் தேடல் வரலாறுகள் (Search history), நமது இணைய உலாவல்கள் (Browsing habits) மூலம், நம்முடைய பழக்கவழக்கங்களை துல்லியமாக தெரிந்து வைத்துள்ளன.

 

நமது தனிப்பட்ட செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்கின்றன. இவன் வேசம் போடுகிறான் கள்ளப்பய எத்தனை பேருடன் இன்று சிரித்து சிரித்து பேசினான் தெரியுமா? எவ்வளவு பொய் சொன்னான் தெரியுமா? மதுரையில் இருந்து கொண்டு சென்னையில் இருப்பதாகப் பொய் சொன்னான் என்று நமது தினசரி தரவுகளை ஒப்பீடு செய்து பார்த்து சிரித்துக் கொள்ளும்.

 

அரசு கண்காணிப்பு (Government Surveillance):

 

கமெரா மற்றும் இடம் சேகரிப்பு: சில நாடுகளில், குறிப்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் (law enforcement agencies) அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் அல்லது சட்டரீதியாக நமது மொபைல் தகவல்களை அணுகவோ கண்காணிக்கவோ முடியும். இதற்கு அரசின் உரிமையுள்ள விதிமுறைகள் உள்ளன.

 

மோசடி மற்றும் ஹேக்கிங் (Fraud & Hacking):

மோசடி செயலிகள் (Malware Apps) ஹேக்கிங் மூலமாக தரவுகளை திருடுதல். சில இணைய இணைப்புகள், குறிப்பாக பாதுகாப்பற்ற Wi-Fi பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் நமது தகவல்களை திருட நுழைகின்றனர். இதன் மூலம் நமது இணைய செயல்பாடுகள் மற்றும் மொபைல் தகவல்களைப் பரிசோதிக்க முடியும் அதன் மூலம் நமது வங்கித் தரவுகளை திருடுவதன் மூலம் பெரும் பொருளாதார மோசடிகள் நடக்க வாய்ப்புண்டு.

எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது!

 

1. செயலிகளின் அனுமதிகளை சரிபார்த்து வழங்க வேண்டும். செயலிகள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு கவனித்து, தேவையற்ற அனுமதிகளை மறுக்க வேண்டும்.

2. பாதுகாப்பு மென்பொருள் (Security Software) மொபைல் சாதனங்களில் நல்ல பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவி, அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

3. பாதுகாப்பு அமைப்புகள் (Privacy Settings) மொபைல் சாதனங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களை முறையாக அமைத்து பாதுகாக்க வேண்டும்.

4. பாதுகாப்பற்ற Wi-Fi களை தவிர்ப்பது நல்லது. பொதுவான Wi-Fi களை பயன்படுத்தும் போது VPN (Virtual Private Network) களை பயன்படுத்துவது சிறந்தது.

நம் மொபைல் சாதனங்கள், நம் வாழ்க்கையை சுலபமாக்குவதற்கும் தகவல் பரிமாற்றங்களை வேகமாக்குவதற்கும் உதவுகின்றன. ஆனால், நமக்கு தெரியாமலேயே, நம் தகவல்களை திருடி பல்வேறு துறைகளின் மூலம் நம்மை கண்காணிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, நம் மொபைல்களைப் பயன்படுத்தும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அனுமதிகளை வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 -     மு. உசைன் கனி.